Thursday, 7 March 2013

றெக்கை கட்டி நீந்துபவர்கள்

றெக்கை கட்டி நீந்துபவர்கள் 
சிறுகதைத் தொகுதி 
ஆசிரியர் : பாரதிபாலன் 
பக்கங்கள்: 136
விலை:ரூ.95/-
வெளியீடு:சந்தியா பதிப்பகம் 
புதிய எண் .77,53வது தெரு,
9வது அவென்யூ, அசோக் நகர்,
சென்னை-600083(தொ.பே.044-24896979
-------------------------------
ஒவ்வொரு கலைவடிவங்களும் தனக்கான வடிவத்தைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. அப்படி நேர்வதைத் தான் நேர்த்தி என்கிறோமோ?- முன்னுரையில் பாரதிபாலன் 

தேனி மாவட்டத்தில் எந்தெந்த மாதிரியோ  கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள்.நுண்மாண் நுழைபுலம் கண்டு தமிழ் மண்ணின் தனி நிறத்தை,தனிக்குரலைத் , தனிச் சுவையை  கூர்ந்து கவனித்துப் பதிவு செய்கிறவர் வரிசையில் சினிமாவுக்கு வந்த பாரதிராஜா , இளையராஜா. இப்படி அந்த மாவட்டத்தில் பலர்.
 எழுத்தாளர்கள் குறைவு. 
ஈடு செய்ய வந்தவர் பாரதிபாலன் 
சின்னமனூரின் குசச்செட்டியார்,மரத்தச்சன் நெசவாளர், பூட்டு செய்கிறவர்,பாம்பாட்டி வித்தைக்காரர்,பூம்பூம் மாட்டுக்காரர், நகை செய்கிறவர் போன்றே சிறுகதை வடிவத்தில்  கலையைச் சிருஷ்டித்துப் பார்க்கிற, பெரிய பலன்களை எதிர்பாராத கலா திருஷ்டியின் சிற்றுளி பட்ட சிற்பங்களாக 12 சிறுகதைகள்.இந்தத் தொகுதியில்.
நேர்வது மட்டுமே நேர்த்தியாகாது.செய்திறன், உணர்திறன் கூடினாலே நேர்த்தி கிட்டும் என்று இந்தத் தொகுதியின் ஒவ்வொரு சிறுகதையிலும் சொல்லாமல் சொல்கிறார் பாரதிபாலன்.
"ஏலே,ஒன்பதுக்கு அடுத்து என்னடா?" ஒரு பையன் கேட்பான்.
பத்து என்று புதிருக்குப் பதில் சொல்வது போல் சுற்றி நிற்பவர்கள் சொல்லிச் சிரிப்பார்கள் 
பத்மநாபன் என்ற பெயர் கொண்டவர்களுக்கு இயல்பாக நேரும் சுருக்குப் பெயர் எத்தனை பேருக்கு அப்படி உறுத்தி இருக்கும்?அந்தப் பெயர்  எந்தெந்த விதமாக வெல்லாம் கூப்பிடப்படும்? பாரதிபாலனின்செவிகள் பதிவு செய்து நமக்குள் ஒரு புன்னகையை வரவழைக்கின்றன.
பெயர் எண்ணாக மாறிவிடும்போது ஓர் உயிரில் ஒரு சோகம் பதிவாகி விடுகிறது.வளர்ந்து வாலிபனாகி,மணந்து பெண் பிள்ளை பெற்று அவளும் பெயருக்குப் பதில் எண் விளி பெறுவது கண்டு மனசு துடிக்கிறது. இந்த சின்னஞ்சிறு சோகமும் ஏக்கமும் கூட வாழ்க்கை வழங்கும் எழில் கோலம் தான்.'எண்களால் ஆனவர்கள் 'கதையில் .போட்டுக்காட்டி நெஞ்சை நெருடுகிறார் பாரதிபாலன் 
இயலாமையால் சுருங்குகிற போது தான் மனம் சுடுகிறது 'றெக்கை கட்டி நீந்துபவர்கள் ' கதையில் மனைவிடம் ஏதும் கேட்கமுடியாத, அறியமுடியாத அவளிடமிருந்து ஆறுதல் பெறமுடியாத, எவ்வளவு முயன்றும் அவளுக்குள் நுழைய முடியாத கணவன் ஒருவனின் இதய ஒலிகளை சிதார் வாத்தியத்தில் 
வருடுவது போல் வருடிக்காட்டுகிறார்.
முப்பது வருஷம் வேலைக்குப் போகும்போது கவனிக்கத் தவறிய சாலை வெய்யில் ரிடையர் ஆன பின் கவனிக்கப்படுகிறது.வேர்வைப் பிசுபிசுப்பிலும் 
மனுஷ நெரிசல் புழுக்கத்திலும் உணரப்பட்ட வெயில் அல்ல அது. வேறு விதமான வெயில்.வேலை பார்த்த கட்டிடங்களில், திறந்த ஜன்னல்களில் புகுந்து புகுந்து வெளிவந்து விளையாடும் புறாக்கள் இப்போது கவனிக்கப்படுகின்றன.மனசில் ஒரு தோல்வி.அலுவலக உறவுகளில் அடைந்த தோல்விகளை விட மகா தோல்வி.எனினும் 'கூடு திரும்புதல்' கதையில் வீடு திரும்பும் வயோதிகருக்கு  மீதமிருக்கிற பொழுதுகள் பற்றிய ஆறுதல்.நம் மனசின் ஒரு ஜன்னலில் சில புறாக்கள் நுழைந்து சிறகுகள் படபடக்க மற்றொரு ஜன்னலில் வெளியேறுகின்றன.
'பய புள்ளீக அம்புட்டையும் புடுங்கிப்போட்டு அகலமா ரோடு போடப்போறாங்கலாம்;நாலு வழிப்பாதையாம்! மூணு மயிலு நாலு மயிலு தூரம் எம்புட்டு மரங்க!அம்புட்டையும் தரைமட்டமாக்கிப் போட்டுட்டு தங்க நாற்கரச்சாலை கொண்டாரப்போராங் களாம் அப்புறம் எம்போல அப்புராணிங்க எல்லாம் இப்படி நடக்க முடியுமோ என்னவோ!' இருமருங்கிலும் புளிய மரங்கள் அடர்ந்த நிழல் படர்ந்த சாலையில் நடந்து சென்ற  மணியக்காரர் மன ஓலம் கேட்கிற கதை தான் 'ஒலியும் ஒளியும் '
"தேவி, இங்கே வாயேன்!"
"அடுப்புலே வெச்சிருக்கேன்"
"நெருப்போட விளையாடத்தான் பிடிக்குமாக்கும்?"
"அரைமணி தாமதமானாலும் உங்க வயித்திலே நெருப்பு மூண்டிடுமே !" 
"இதுவும் ஒரு பசி தான்,வா!"
ஒருநாள் ஒருபோழுதாவதாவது கலைந்த தலையோடோ, கலர் மங்கிய சேலையோடோ கண்டிராத காதல் மனைவி அடுப்பங்கரை வேள்வியில் அன்றாட குடும்பப் போக்கின் யக்ஞத்தில்  படித்த படிப்பை,இருந்த ரசனைகளை எல்லாம் கரைத்துக்கொள்ளும் சொல்லில் வராத சோகத்தைத் தீட்டிக் காட்டும்போது,கர்மயோகியாகி விட்ட மனைவியின் மன முடுக்கில் ஒரு துளி காதலுக்கு மனுப்போடும் கணவனின் கனவாகிவிட்ட பந்தங்கள் நம் வீட்டிலும் நிழலாடுவது,நீயும் நானும் வேறல்ல' கதையில்  புலப்படுகிறது.
கண்ணகி மதுரையை எரிக்கிறாள்.சந்தான லக்ஷ்மி நயவஞ்சக  நாடகம் போடும் கரஸ்பாண்டன்ட் முகத்தில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டுக் காறித் துப்புகிறாள்.நயவஞ்சக  நாடகத்தை வெகு நயமாகக் கையாளும் பாரதிபாலனிடம் மற்றொரு கலைப்பண்பு மறைந்திருப்பது'பெருந்தீனிக் காரர்கள் ' கதையில்  புலப்படுகிறது.
ஒரு தெரு, ஒரு வாடகைக்குடியிருப்பு,அங்கு வாழ்ந்த கணங்கள் வருடங்கள் அது சொந்தவீடு அல்லவென்பதால் அற்றுப்போய் விடுமா? அது என்னென்ன விதமாய் மனமூட்டத்தில் புகைமண்டலங்கள் எழுப்பும் என்று 'தெருவாசம்' அலைபாய வைக்கிறது.இப்படி12கதைகளுக்குள்ளும் பல்வேறு உணர்வுக்கோணங்கள் விரிந்தி ருப்பதைப் பட்டியலிட்டுக் காட்டவேண்டிய அவசியம் இருந்தாலும் இங்கே இடம் இல்லை.
இந்தத் தொகுதியில் ஆங்காங்கே இரைந்திருக்கும் மனிதர்கள் பொதுவாக இந்த ஹாட்சிப்ஸ் யுகத்தின் பாஸ்ட்-புட் கலாசாரத்தின் தலைதெறிக்கும் வேக்த்திற்கு மொழியில் அடங்காத எதிர்ப்புக்குரல்கள்.அதிகம் பேசத்தெரியாத
கலைத்திறன் இருப்பதால் பாத்திரங்களையே பேசவைக்கிற பாரதிபாலன் என்னென்னவோ சொல்ல வருகிறார்!
இந்த மழை மட்டும் தான் அப்படியே இருக்கிறது .எப்போதும் போல எல்லோருக்கும் பெய்துகொண்டு என்று முடிகிற தொகுதியின் இறுதிக்  கதையின் இறுதி  வரி என்னமோ சொல்லவில்லை?
போலிப் புதுமை , பிலுக்கிக்காட்டும் படாடோபமற்ற இந்தத் தொகுதியில் ஒரு மேன்மையான மென்மையான ஆத்மா தெரிகிறது.அதன் முடிவற்ற பயணம் விளங்குகிறது.
2012ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க தொகுதி என்று முத்திரை வேண்டுமானால் குத்தி மகிழலாம். ஆனால் முத்திரைகளுக்கு அப்பாலே  போகிற கலைஞன் ?அவன் தரிசனங்களைத் தொடர்ந்துகொண்டே இருப்பான்.
வையவன் 

Sunday, 3 February 2013

பாவண்ணன்

பாவண்ணன்: 

பாவண்ணன்

விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் உள்ள கிராமம் எங்கள் வளவனூர். பழைய நிலஅமைப்பில் அது தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தது, இப்போதைய அமைப்பில் அது விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகிறது. அந்த ஊரில் நான் 1958 ஆம் ஆண்டில் பிறந்தேன். என் அம்மா பெயர் சகுந்தலா. அப்பா பெயர் பலராமன். தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய அப்பா காலத்தில் மாடு, கன்று, தோட்டம், வயல் என்று எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ பங்காளித் தகராறில் எல்லாம் அழிந்துபோய்விட்டன. 
கோயில் நிலத்தில் கூரைவீடு கட்டிக்கொண்டு வாழும்படி நேர்ந்துவிட்டது. அது அவருடைய நெஞ்சில் அழுத்தமான வடுவாகப் பதிந்துவிட்டது. ஒரு விவசாயியாக மறுபடியும் வாழத் தொடங்கவேண்டும் என்று கனவுகளோடு இருந்தார். கொஞ்சம்கொஞ்சமாகப் பணம்சேர்த்து ஏரிக்கரைப்பாசனத்தில் கால்காணி நிலம் வாங்கினார். ஆனால் இரண்டுமூன்று ஆண்டுகள் கூட அதில் விவசாயம் செய்யமுடியவில்லை. அவருக்கான மருத்துவம், குடும்பச்செலவுகள், கடன்கள் எல்லாவற்றையும் சமாளிக்க விற்றுவிடவேண்டியதாக இருந்தது. 
குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை. எனக்கு இரண்டு சகோதரிகள். இரண்டு தம்பிகள். வறுமை ஒரு கரிய நிழலாக எங்கள் குடும்பத்தின்மீது படிந்திருந்தது. ஆனால் அதன் வலியை நாங்கள் உணராதபடி அம்மா எங்களை அன்போடும் ஆதரவோடும் பார்த்துக்கொண்டார். கடைத்தெருவில்தான் அப்பா கடை வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நான்தான் கடைக்குச் சென்று வீட்டுச் செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு, அப்படியே அரிசி, பருப்பு, காய்கறி எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு திரும்புவேன். வருமானம் இருக்கும் சமயங்களில் அப்பா பணம் தருவார். 
இல்லாத சமயங்களில் ஒன்றும் செய்ய முடியாது. அன்று கேழ்வரகுமாவையும் முருங்கைக்கீரையும் பிசைந்து எல்லாருக்கும் அடை செய்து கொடுப்பார் அம்மா. சுடச்சுட நாங்கள் அதை வாங்கி, மண்ணெண்ணெய் விளக்கில் சுற்றி உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். எங்களுக்குக் கதை சொல்லி தூங்கவைத்துவிட்டு, அப்பா வரும்வரை காத்திருப்பார் அம்மா. வறுமையின் துன்பத்தைத் தன் அன்பாலும் சகிப்புத்தன்மையாலும் வென்று குடும்பம் நொடிந்துபோகாமல் காப்பாற்றியது அம்மாதான்.
 எப்படியாவது நான் படித்துப் பட்டம் வாங்கவேண்டும் என்பது அவருடைய கனவு. அப்போதுதான் நல்ல வேலையைப் பெறமுடியும், குடும்பத்தைத் தாங்கமுடியும் என்பது அவர் நம்பிக்கை. ஆனால் அப்பா தன் இயலாமையின் காரணமாக, பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடலாமா என்று பல முறை சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய வற்புறுத்தல் அதிகமானது. தற்செயலாக ஒரு கோயில் திருவிழாவுக்கு புதுச்சேரியிலிருந்து எங்கள் மாமா ஊருக்கு வந்திருந்தார். தங்கிப் படிப்பதற்கு அவரிடம் பேசி அனுமதி பெற்றார் அம்மா. 
புதுச்சேரியில் உள்ள தாகூர் கல்லூரியில் கடைசிநாளன்று சென்று விண்ணப்பம் வாங்கி முழுமை செய்து கொடுத்தேன். கணிதப்பிரிவில் எனக்கு இடம் கிடைத்தது. அம்மாவிடம் நகைகள் என்று சொல்லும்படியாக அப்போது ஒரு ஜோடி கம்மல், மூக்குத்தி, ஒரு வங்கி மோதிரம் மட்டுமே இருந்தன. அவை அனைத்தையும் விற்றதில் நானூற்றிசொச்சம் ரூபாய் கிடைத்தது. நானூறு ரூபாயை அம்மா என்னிடம் கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பிவைத்தார். கல்லூரிக் கட்டணத்துக்கு முந்றூற்றுத் தொண்ணூறு ரூபாயும் என் செலவுக்குப் பத்து ரூபாயும் வைத்துக்கொள்ளச் சொன்னார்.
 வளவனூரைவிட்டுப் பிரிந்த பிறகுதான் அதை நான் எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதை உணர்ந்தேன். என் கனவுமுழுக்க என் ஊரின் சித்திரங்களாலேயே நிறைந்திருந்தன. அக்கம்பக்கம் எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு அழகான ஏரி ஒன்று எங்கள் ஊரில் உண்டு. பக்கத்திலிருந்த எல்லாப் பாளையங்களுக்கும் பாசனத்துக்கு ஏரித்தண்ணீர் மதகுகள் வழியாகப் போகும். உயர்ந்த கரைகள். கரைநெடுகப் புளிய மரங்கள், ஆலமரங்கள், பனைமரங்கள், வேப்ப மரங்கள் என வரிசைவரிசையாக நிழல் தந்தபடி இருக்கும். எல்லா நேரங்களிலும் சிலுசிலுவென்று காற்றடித்தபடி இருக்கும். அந்த நிழலில் நானும் என் நண்பனும் பேசிக்கொண்டே நடப்போம். 
கல்கியின் நாவல்களில் திளைத்திருக்கும்போது, அந்த ஏரி எங்கள் கண்களுக்கு தளும்பும் காவேரியாகத் தெரியும். வந்தியத்தேவனாக எங்களை நினைத்துக்கொள்வோம். ருஷ்ய நாவல்களில் மிதந்திருக்கும்போது, அதே ஏரி பனிபடர்ந்த மிசிசிபி நதியாக மாறிவிடும். எங்கள் கற்பனைக்கு அளவே இருந்ததில்லை. ஏரிக்கரையை ஒட்டி ரயில்வே நிலையமும் தோப்பும் இருந்தன. படிப்பதற்கு அங்கேதான் செல்வோம். 
பெரிய புத்தகங்கள் என்றால் ஒரு புத்தகம், பக்கங்கள் குறைந்த புத்தகங்கள் என்றால் இரண்டு புத்தகங்கள் என ஒரே மூச்சில் உட்கார்ந்த வேகத்தில் படித்து முடிப்போம். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை, அந்த அமைதியான சூழலில் பேசிப்பேசித்தான் வளர்த்துக்கொண்டோம்.[


Tuesday, 22 January 2013

'குரு பிரம்மா

அரவிந்தாட்சன் தொகுத்த 
'குரு பிரம்மா' என்ற நூலிலிருந்து

$அரசன் சொல்லுகிறான், முதலாளி சொல்லுகிறான், தலைவன் சொல்லுகிறான் என்று ஒருவனை கெட்டவன் என்று எடை போடாதே. அதே போலவே - முதல் மூன்று பேரையும்  
$சூரியன் இல்லாத போது விளக்கு வெளிச்சம் தந்து உதவுவது போல; நல்லதைச் சொல்பவன் 'அவன் சிறுவன் தானே' என்று ஒதுக்கி விடாதே! சிறுவனானாலும், சொன்ன சொல்லுக்கு மதிப்பு கொடுத்தே ஆகணும்.
$வரவை கவனிக்காமல், தன் இஷ்டம் போல் செலவழிக்கும் பொக்கிஷம்; அவன் குபேரனைப் போல செல்வம் படைத்தவனாயிருந்தாலும் கூட விரைவில் அழிந்து விடும்.
 $பகைவர்களிடமும் - குற்றம் செய்தவர்களிடமும் - தயை காட்டு. நண்பனிடம் உண்மையோடு இரு. பொதுவாக பொறுமையை கடைப்பிடிப்பது மிக அவசியம்.
 $நல்ல அறிவுரைகள் - துஷ்டர்களின் காதில் ஏறாது, கோபத்தையே வளர்க்கும்.
 $பழங்களும் - நிழலும் கொண்ட பெரிய மரத்தையே எப்போதும் அணுக வேண்டும்.மதிப்பிற்குரியவர்களையே தஞ்சமடைய வேண்டும். (தாழ்ந்தவர்களையல்ல)கள்ளையும் - பாலையும் ஒன்றாக மதிப்புப் போட்டு விடாதே!
$வேலைக்கமர்த்த - அந்தந்த வேலையில் தேர்ச்சி பெற்றவனாயும், தெரிந்தவனாகவும் இருப்பது முக்கியம். அப்படி அப்படி அமர்த்தியவனே திறமைசாலியாவான். மற்றவன் தடுமாறுவான்.
 $தேவதைகள் - குரு - அரசன் - பசு - குழந்தைகள் - முதியவர்கள். ஆகியவர்களை எக்காரணம் கொண்டும் கோபித்துக் கொள்ளக் கூடாது.
 $கடவுள் நம் உறக்கத்தில் - நம் அவயவங்கள் அனைத்தையும் உறங்கப் பண்ணுகிறார். விழித்ததும் - தாமரை மலர்வது போல - எல்லாமே மலர்கிறது. (கருணைக் கடல்)
$இந்தக் காலத்தில் மஹான்கள் இல்லை என்று நினைப்பது தவறு. மஹான்கள், எல்லா காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை கண்டு கொள்ளக்கூடிய - அறிவும் - ஆவலும் நமக்கு இல்லாதது தான் குறை.
$காவி உடையின் உபயோகம்:- காவி நிறமுடைய செம்மண் விஷத்தை மாற்றும் சக்தி உடையது. வீட்டில் சுவர் ஓரங்களில் - செம்மண் காவி பூசினால் - விஷப்பூச்சி அண்டாது. சந்நியாசிகள் - பாழடைந்த மண்டபம், தெரு ஓரத்திண்ணை, இவைகளில் படுப்பார்கள். அவர்கள் உடையில் அந்த செம்மண் காவியிருப்பதால், விஷ ஜந்துக்கள் - நெருங்க முடியாது

sun of My Life -
Yu-Chi-Hwan
                   shall not the bright sun shine 
                   Above my head where I go?
                  
                   Abiding by the ancient laws,
                   Be it fortune to sleep with the stars.
                  
                   And to endure with this rain and this wind.
                  
                   Let me love my life with zeal
                   And what belongs to it besides;
                   Yet humbly I ask to be delivered
                   From grovelling sentiment ans shame.
                  
                   Since to my enemies, and to those
                   Who count my enemies,
                   I have a justifying  hate,
                   Even when the sun above has stamped
                   Into my sockets his sunflower brand,
                   And I am suddenly butchered like a beast
                  
                   What grudge and grievance should  I bear
                   Against the sun, the center of my life? 
                                                          translated by Lee In-Soo.




head
here in  December in the land of northernmost Manchuria,
Unblest by snow, and slashed by the dry ripping wind of the Amur,
Here at the cross-roads of a small stripped cidadel town, 
Are exposed high on stakes twin heads of whilom bandits;
Their half open eyes staring into the distant polar circuit
Of hills and rivers beneath the sun-set shimmer of the bladed sky.
Know you now in death is one of the four evils
But that the preservation of peace renders at times
Human life as cheap as a chicken or a cur.
Your life might well have proved an instant threat of my death,
So that to rule out force by means of force has ever been
The sanction of blood from times primeval.
Now as I pace along this wind -swept thoroughfare,
I am resolved afresh of the dogged ferocity of life.
You who housed your uncontrollable souls of treachery,
Close your eyes in peace! May merciful heaven
Cover this landscape of waste thoughts with deep snow!   
                                                                                    translated by Lee In-Soo.







பிரதர்ஸ் கரமசாவ்

ப்யோடர் தாஸ்தாவ்ஸ்கியின்
பிரதர்ஸ் கரமசாவ் நாவலில் இருந்து
அவனது அறையின் ஜன்னல்கள் தோட்டத்தைப் பார்த்தன. எங்கள் தோட்டம் நிழல் மிகுந்த ஒன்று. முதிர்ந்த மரங்களில் மொட்டுகள் விட்டிருந்தன. வசந்தத்தின் முதல் வருகைப்பறவைகள் கிளைகளில் அமர்ந்து ஜன்னல்களை நோக்கிக் கீச்சிட்டுப் பாடிக்கொண்டிருந்தன . அவைகளைப் பார்த்து ரசித்துவிட்டு  உடனே அவன் அவற்றிடம் மன்னிப்பை யாசிக்கத்தொடங்கினான்." சொர்க்கத்துப் பறவைகளே , ஆனந்தப்பட்சிகளே , உங்களுக்கெதிராகவும் நான் பாவம் செய்திருக்கிறேன்.என்னை மன்னியுங்கள்.
அந்த நேரத்தில் எங்களில் யாருக்குமே அதைப் புரிந்து கொள்ளத்தெரிய வில்லை..ஆனால் அவன் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.
"ஆம்,என்னைச்சுற்றி பறவைகள், மரங்கள், புல்வெளிகள், ஆகாயம்  என்று கடவுளின் மகிமை சூழ்ந்திருக்க அவற்றை நான் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட்டு அவமானத்திலே வாழ்ந்துவந்தேன்" என்றான்.
 அவனுடைய தாய் அழுதபடியே   "நீ உன் மீது மிகுதியான  பாவச் சுமைகளை ஏற்றிக்கொள்கிறாய் " என்றாள்  
"அருமை அம்மா, நான் துன்பத்தால் அழவில்லை. அது ஆனந்தக்கண்ணீர். அவற்றின் எதிரே நான் பணிவோடு இருக்கவே விரும்புகிறேன். காரணம் அவற்றைப் போதிய அளவு   எப்படி நேசிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் எதிரே நான் பாவம் செய்திருந்த போதும் எல்லாமும் எல்லோரும் என்னை மன்னிக்கின்றனர். அது தான் சொர்க்கம். இப்போது நான் சொர்க்கத்தில் இல்லையா சொல்?"என்றான்.

From- Brothers Karamazov by Fyodor Dostoyevsky 
The windows of his room looked out into the garden, and our garden was a shady one, with old trees in it which were coming into bud.The first birds of spring were flitting in the branches, chirruping and singing at the windows. And looking at them and admiring them,he began suddenly begging their forgiveness too: “Birds of heaven,happy birds, forgive me, for I have sinned against you too.” None ofus could understand that at the time, but he shed tears of joy. “Yes,”he said, “there was such a glory of God all about me: birds, trees,meadows, sky; only I lived in shame and dishonoured it all and did not notice the beauty and glory.”
    “You take too many sins on yourself,” mother used to say, weeping.
    “Mother, darling, it’s for joy, not for grief I am crying.Though I can’t explain it to you, I like to humble myself before them,for I don’t know how to love them enough. If I have sinned against everyone, yet all forgive me, too, and that’s heaven. Am I not in heaven now?”

'ஸ்னோஸ் ஆப் கிளிமாஞ்சாரோ'

'எர்னெஸ்ட் ஹெமிங்வே'வின் 
'ஸ்னோஸ் ஆப் கிளிமாஞ்சாரோ' விலிருந்து
"இல்லை.இது எனக்கு நன்றாக இருக்கிறது" என்றான்.
 ஆகஇப்போது எல்லாம் முடிந்து விட்டது என்று அவன் நினைத்தான்.ஆக ,அதை முடித்து வைப்பதற்கு அவனுக்கு மற்றொரு வாய்ப்பு கிட்டாது .ஒரு பானத்திற்குப் பிந்திய தகராறில் இப்படியாக அது முடிந்தது .வலது காலில் காங்கரீன் தொடங்கியதிலிருந்து அவனுக்கு ஒரு பானத்திற்குப் பிந்திய சச்சரவில் அது இப்படியாக  முடிந்தது வலது காலில் காங்கரீன் தொடங்கியதிலிருந்தேவலியில்லை. வலியோடு அந்த பயபீதியும் போய்விட்டது. முடிவில் இது தான் அதன் இறுதி  என்று நினைத்தபோது  இப்போது பெருமளவில் களைப்பும் கோபமும் வந்தது. வருஷக்கணக்காக அது அவனை ஆட்டிப்படைத்தது. இப்போது அதன் அளவில் அது ஒன்றுமில்லாமல் போய்விட்டது.போதிய அளவு களைத்துபோனது எப்படி எல்லாவற்றையும்  எளிதாக்கி விடுகிறது என்பது விநோதம் தான்.
இப்போது  நன்றாக எழுதுவதற்குப்போதுமான அளவு தெரிந்து கொண்டபிறகு தான்  எழுதவேண்டும் என்று அவன் சேர்த்து  வைத்திருந்த  விஷயங்களை  இனி எழுதவே வேண்டாம் . அவற்றை எழுத முயற்சிப்பதில் தோல்வி அடையவேண்டியே வராது. இனி அவன் அவற்றை தெரிந்து கொள்ளவேண்டி வராது   'உன்னால்  எழுதவே  முடியாது அதனால் தான் அவற்றை ஒதுக்கி வைத்துத் தொடங்காமலேயே இருந்தாய் '.நல்லது. இப்போது அவனுக்குத்  தெரியவேண்டி வராது 
"நாம் வந்தே இருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்." அந்தப் பெண்மணி சொன்னாள். கிளாசைக் கையில் பிடித்தபடி உதட்டைக் கடித்துக்கொண்டே அவள் அவனைப் பார்த்தாள்
"இது மாதிரி எதுவும் பாரிசில் உனக்குக் கிடைத்திருக்காது" என்றாள்
"உனக்குப் பாரீசைத்தான் நீ நேசிப்பதாக எப்போதும் சொல்வாய்.நாம் பாரிஸிலேயே இருந்திருக்க வேண்டும் அல்லது வேறெங்காவது போயிருக்கவேண்டும். நான் எங்கேயாவது போயிருப்பேன். நீ விரும்புகிற எந்த இடத்திற்கும் போவதாக நான் சொன்னேன். நீ  ஷூட்டிங் செய்ய விரும்பி யிருந்தால் நாம் ஹங்கேரிக்கு ஷூட்டிங்குக்குப் போயிருக்கலாம்.அங்கே சௌகர்யமாக இருந்திருக்கும்."
Snows of Kilimanjaro
Ernest Hemingway
No," he said. "It's good for me."
So now it was all over, he thought. So now he would never have a chance to finish it. So this was the way it ended in a bickering over a drink. Since the gangrene started in his right leg he had no pain and with the pain the horror had gone and all he felt now was a great tiredness and anger that this was the end of it. For this, that now was coming, he had very little curiosity. For years it had obsessed him; but now it meant nothing in itself. It was strange how easy being tired enough made it.
Now he would never write the things that he had saved to write until he knew enough to write them well. Well, he would not have to fail at trying to write them either. Maybe you could never write them, and that was why you put them off and delayed the starting. Well he would never know, now.
"I wish we'd never come," the woman said. She was looking at him holding the glass and biting her lip. "You never would have gotten anything like this in Paris.
“You always said you loved Paris. We could have stayed in Paris or gone anywhere. I'd have gone anywhere. I said I'd go anywhere you wanted. If you wanted to shoot we could have gone shooting in Hungary and been comfortable."

Monday, 21 January 2013

'பிரான்ஸ் காப்கா'வின் 'மெடமார்பசிஸ்'

 அவர்களோடு  அவனும் சேர்ந்து நடித்து விடவேண்டும்.
கே' ஒரு சுதந்திரமான நாட்டில் வசித்தான். அங்கு எல்லா இடங்களும் சமாதானமாக இருந்தன. எல்லாச்சட்டங்களும்  நேர்மை ஒழுங்கானவை. அவை சீராகக் கடைப்பிடிக்கப்பட்டன. அவனது  சொந்த வீட்டில் அவனை எதிர்க்கும் துணிவு யாருக்கு உண்டு ? அவன் எப்போதுமே வாழ்க்கையை எவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியுமோ அப்படி எடுத்துக்கொண்டான், பாலங்கள் குறுக்கிட்டால் அவற்றைக் கடந்தான்.எல்லாமே ஓர் அச்சுறுத்தலுக்கு ஆளாகிய சந்தர்ப்பங்களிலும் எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்பட்டதில்லை. ஆனால் இங்கு அது செய்ய வேண்டிய சரியான வேலையாகத் தோன்றவில்லை.
அதை அவன் ஒரு வேடிக்கையாக , பாங்கில் பணியாற்றும் அவனது சகாக்கள் ஏதோ ஒரு தெரியாத காரணத்துக்காக ஏற்பாடு செய்துள்ளதாக எடுத்துக்கொண்டு இருக்கலாம்.மேலும் இன்று அவனது முப்பதாவது பிறந்தநாள். அது நடக்கக்கூடியது தான்.அந்தபோலீஸ்காரர்கள் முகத்தைப்  
பார்த்து ஏதாவது ஒரு மாதிரி சிரிப்பதைத் தான் அவன் செய்யவேண்டும், அவர்களும் அவனோடு சேர்ந்து சிரிப்பார்கள். ஒருக்கால் அவர்கள் தெரு மூலையில் இருக்கும் வியாபாரிகளாக இருக்கலாம்; பார்த்தால் அப்படித்தான் தென்படுகிறார்கள். அவன் ஒரேயடியாக , பிரான்ஸ் என்று அழைக்கப்பட்ட மனிதன் கண்ணில் பட்டதில் இருந்து அப்படி ஒரு முடிவெடுத்து விடவில்லை. அந்த ஜனங்களிடம் கிடைக்கக்கூடிய எந்த ஒரு சிறிய அனுகூலத்தையும் அவன் தவற விட்டுவிடக்கூடாது
அதில் ஒரு மிகச் சிறிய சிக்கல் உண்டு. மக்கள் ஒரு வேடிக்கையைப் புரிந்துகொள்ளத்தெரியாதவன் எனறு பின்னால் சொல்லக்கூடும். அவனது மிகவும் முன்னெச்செரிக்கையுடைய நண்பர்களைப்போலன்றிபொதுவாக அவன் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிற வழக்கம் இல்லாதவன் தான்.அதற்குப் பின் என்ன நடக்கும்,அதனால் அவன் எவ்வளவு வருந்தவேண்டி வரும்  என்று சற்றும் நினைக்காமல் தான் அவன் செயல்பட்டான். மீண்டும் அது நடக்கக்கூடாது , குறைந்த பட்சம் இந்த முறை. அவர்கள் நாடகம் நடிப்பதாய் இருந்தால் அவர்களோடு  அவனும் சேர்ந்து நடித்து விடவேண்டும்.
'பிரான்ஸ் காப்கா'வின் 'மெடமார்பசிஸ்' நாவலில் இருந்து 

K. was living in a free country, after all, everywhere was at peace, all laws were decent and were upheld, who was it who dared accost him in his own home? He was always inclined to take life as lightly as he could, to cross bridges when he came to them, pay no heed for the future, even when everything seemed under threat. But here that did not seem the right thing to do.
 He could have taken it all as a joke, a big joke set up by his colleagues at the bank for some unknown reason, or also perhaps because today was his thirtieth birthday, it was all possible of course, maybe all he had to do was laugh in the policemen's face in some way and they would laugh with him, maybe they were tradesmen from the corner of the street, they looked like they might be - but he was nonetheless determined, ever since he first caught sight of the one called Franz, not to lose any slight advantage he might have had over these people.
There was a very slight risk that people would later say he couldn't understand a joke, but - although he wasn't normally in the habit of learning from experience - he might also have had a few unimportant occasions in mind when, unlike his more cautious friends, he had acted with no thought at all for what might follow and had been made to suffer for it. He didn't want that to happen again, not this time atleast; if they were play-acting he would act along with them.
From 'Metamorphosis'-Franz Kafka

Friday, 18 January 2013

நடிப்பு ஒரு கடினமான தொழில்

 நடிப்பு ஒரு கடினமான தொழில்.
 நடிப்பு ஒரு கடினமான தொழில். சொல்லப்போனால் எல்லாத்தொழில்களைக் காட்டிலும் மிகவும் கடினமானது.நடிப்பு கடினமானது என்பதனால் அல்ல. பலவகைத்   துறைகளில் அலைந்து திரிந்து பார்த்து விட்டு  நடிப்புத் துறை நாடி வந்திருக்கும் ஏராளமான  ஆர்வல ர்களின்  எண்ணிக்கையால் தான். 
அவர்கள் தான் நடிப்பின் கொலஸ்ட்ரால்கல். உங்களைச் சேரவேண்டிய ரத்தக்குழாய்களை  அடைத்திருப்போர் அவர்கள் தான். ஒரு நடிகராவதில் உள்ள சிரமத்தின் நடுவே தம் மூக்கை நுழைத்துக்கொண்டு சுற்றியலைந்து கொண்டு அவர்கள் நடிப்புத்தொழிலுக்கே ஒரு கெட்டபெயர் வாங்கிக் கொடுக்கிறார்கள் .மேலும் நீங்கள் நடிகர் ஆவதற்கு பெரிய இடைஞ்சல் தருகிறார்கள்.
நீங்கள் அவர்களில் ஒருவர் ஆய்விடக்கூடாது. டாவோ சொல்வது இது தான். நீங்கள் நடிகர் ஆகவேண்டுமானால் கட்டாயம் நடிக்க வேண்டும். நடிக்கும் வாய்ப்பு உடனே உங்களுக்குக் கிடைக்கவில்லை   என்றால், உங்கள் சொந்தமான வாய்ப்பை நீங்களே உருவாக்குங்கள். உங்கள் சொந்தமான தியேட்டரை நீங்களே உருவாக்குங்கள்.நண்பர்களை ஒன்ருசேர்த்துக்கொண்டு ஓரிரு நாடத்தயாரிப்புகளை நீங்களை உருவாக்குங்கள்.நாடகத்தை நடித்துக்காட்ட ஓர் இடத்தைக் கண்டுபிடியுங்கள்.அப்படி ஒரு இடம் கிடைப்பதோடு அல்லாமல் டிக்கட்களை விற்றுச்  சிறிது பணம் சேர்க்கவும் தோதாக அமைய  சிறிய அரங்க அமைப்பு  உள்ள உள்ளூர் ஹோட்டல் ஒன்றைக் கண்டுபிடியுங்கள். நிர்வாகத்தினரிடம் ஒரு தாழ்ந்த மேடை அமைத்து ப்ளட் லைட்கள் வைக்க இரும்புக்கம்பங்களுக்கு ஏற்பாடு செய்யக் கோருங்கள் அவர்கள் உங்களுக்கு டின்னர் பரிமாற நீங்கள் உங்கள் நாடகத்தை நீங்கள் நடிக்கிற நாடகத்தை அரங்கேற்றுங்கள். அவர்கள் அந்த நிகழ்ச்சியை ஒரு டின்னர் தியேட்டர் நிகழ்ச்சியாக அறிவிக்கட்டும்.
உங்கள் நாடகக்குழு உறுப்பினர்கள் டிக்கட் விலையில் நியாயமான பங்கு வீதம் ஒன்றை ஒவ்வொருவரும் பெறுமாறு திட்டமிடுங்கள், நண்பர்கள் மற்றும் மீடியாக்களுக்காக  மிகச் சிறிய அளவு காம்ப்ளிமென்டரி டிக்கட்கள் மட்டுமே அனுமதிக்க ஒப்புக்கொள்ளுங்கள். நாடகக்குழுவினருக்கு டிஸ்கௌண்ட் விலையில் டின்னர் பெற ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
['டாவோ ஆப் ஏக்டிங்' என்ற நூலில் இருந்து  ] 

Acting is a hard profession.  Maybe it is the most difficult of all.  This is not because acting is hard; rather, it is due to the tremendous numbers of aspirants who have wandered in from schools of all types.  They are the cholesterol of acting.  They clog the arteries that lead to your employment.  By hanging around and sniveling about the difficulty of becoming an actor, they give the profession a bad name, and make it difficult for you to become an actor.

You must not be one of them.  The Tao says that to be an actor, you must act.  If there is no readily available acting opportunity for you, create your own.  Start your own theatre.  Get together with friends and work up an idea for a production or two.  Then go find a place to present it.  One place that may not only be available to you, but also may help you sell tickets for your production so you can make a little money with it, is a local restaurant that has a banquet room.  Talk to the management about putting a low platform and a couple of floodlights on poles in there.  They serve dinner and you present a show.  They market it as a dinner-theatre event. 

You work out with them that your production group gets a fair percentage of the ticket price based on so much per person in attendance.  Agree on a very small number of complimentary admissions that both you and the restaurant may have for friends and the media.  Arrange that the performance company members may purchase dinner at an employee’s discount.  .( An excerpt from 'Tao of Acting')

பாம்பு வழிபாடு

பாம்பு வழிபாடு – வைக்கம் முஹம்மது பஷீர்


.....அன்றொரு நாள் இரவு பதினோரு மணிக்கு நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்காக எழுந்தேன். பார்த்தபோது சமையலறைக்கு அருகிலிருந்த மண்ணால் ஆன திண்ணைக்கு முன்னால், மணல் பரப்பப்பட்ட மூன்று கற்களை வைத்து தேங்காய் மட்டைகளை எரிய வைத்து உம்மா நெய்யப்பம் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
வாப்பாவும் மற்ற பிள்ளைகளும் உள்ளே உறக்கத் தில் இருந்தார்கள். உம்மா விற்குத் துணையாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் இருந்தாள். அவள் கொஞ்சம் தேங்காய் நார்களைக் கொண்டு வந்து கயிறு பிரித்துக் கொண்டிருந்தாள். ஒரு சிறிய மண்ணெண்ணெய் விளக்கு உம்மாவிற்கு அருகில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. வாசலிலும் பிற இடங்களிலும் அடர்த்தியான இருட்டு இருந்தது. நானும் இருட்டிற்குள் நுழைந்தேன். வாசலுக்கு அருகில் புதியதாக தோண்டப்பட்ட கிணறு இருந்தது. அதற்கு அரைச்சுவர் கட்டப்படாமல் இருந்தது. கிணற்றின் கரையில் இருந்த பானையில் நீர் மூடி வைக்கப்பட்டிருந்தது. நான் இருட்டில் சிறுநீர் கழித்து விட்டு கழுவிக்கொண்டு வந்து உம்மாவின் அருகில் உட்கார்ந்து, முறத்திலிருந்து நெய்யப்பத்தை எடுத்து பிய்த்து தின்ன ஆரம்பித்தேன். நான் வாசலை நோக்கி கால்களை நீட்டி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். நான் கால்களை ஆட்டும்போது பிரித்துக் கொண்டிருக்கும் கயிற்றில் கால்கள் பட்டன. அப்படியே நெய்யப்பத்தைத் தின்று கொண்டிருக்கும்போது, திடீரென்று நான் கதகளியில் முத்திரை காட்டுவதைப் போல இருந்து விட்டேன். ஒரு அசைவும் இல்லை. வலக் கையில் இருந்த நெய்யப்பத்தை வாய்க்கு கொண்டு செல்கிறேன். அப்படியே நின்று விடுகிறது. காரணம், என்னுடைய வலக் காலின் முழங்காலுக்கு அருகில் பாம்பின் வால் அசைகிறது. வளைந்த வால் அல்ல. பருமன் குறைந்து வளையாமல் இருக்கும் கறுப்பு நிற வால். தலையை என்னுடைய பாதத்தில் வைத்துவிட்டு பாம்பு என்னுடைய காலில் அழகாகச் சுற்றியிருந்தது. கறுப்பு நிறப் பாம்புதான். ஆங்காங்கே வெள்ளை நிறத் தில் புள்ளிகள் இருக்கன் றனவோ என்று சந்தேகம். நான் அப்படி உட்கார்ந்திருப் பதை கயிறு பிரித்துக் கொண்டிருந்த இளம்பெண் பார்த்தாள். அவளுக்கு சிரிக்க வேண்டும் போல தோன்றியது. ஆனால், திடீரென்று சிரிப்பு பயங்கரமான கூச்சலைப் போன்ற அழுகையாக மாறியது. உம்மாவும் பார்த்துவிட்டாள். உம்மாவும் இளம்பெண்ணும் சேர்ந்து வாய்விட்டு உரத்த குரலில் கூப்பாடு போடத் தொடங்கினார்கள். வாப்பா எழுந்து வந்தார். எரிந்து கொண்டிருந்த கயிறு, பந்தம், விளக்குகள், பிரம்புகள் ஆகியவற்றுடன் சில நொடிகளில் பக்கத்து வீடுகளில் இருந்து பல வகைப்பட்ட ஜாதிகளையும் மதங்களையும் சேர்ந்த பத்து முப்பது ஆட்கள் வாசலில் கூடிவிட்டார்கள். என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் ஒரு பிடியும் கிடைக்கவில்லை. விளக்கு களின் ஒரு பெரிய அரை வட்டம் வாசலில் இருந்தது. வெண்மை நிறத்தில் கால், “பளபளா’ என்று மின்னிக் கொண்டிருந்த கறுப்பு நிறப் பாம்பு. 
' பாம்பு வழிபாடு' சிறுகதையில் – வைக்கம் முஹம்மது பஷீர்


'கனகாம்பரம்' கதையிலிருந்து

'கனகாம்பரம்' கதையிலிருந்து 
.....எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த ராமு, தெருவில் மணி எதிரே வருவதைக் கண்டு மிகவும் சங்கடமடைந்தான். அப்பொழுது மணியைக் கண்டு பேசுவதா வேண்டாமா என்று கூட அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. வீட்டுக்கு வந்திருந்ததாகச் சொல்வதா வேண்டாமா? அவன் மனைவி சொன்னதைச் சொல்வதா வேண்டாமா? இப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன. ஒருவேளை மணியின் அநுமதியின் பேரில் அவ்வளவு சகஜமாகப் பேசியிருந்தால் சரியாய்ப் போய்விடும். இல்லாவிட்டால் தான் சொல்லுவதால் அந்தப் பெண்ணின் அசட்டுத்தனமோ, அல்லது அறியாமையோ மணிக்குக் கோபத்தை உண்டாக்கினால்? அவர்களிடையே பெருத்த மனத்தாங்கல் ஏற்பட்டால்? யார் கண்டார்கள்? மனித சுபாவம் எது வேண்டுமானாலும் நினைக்கும். அந்த மாதிரி மனஸ்தாபத்திற்குத் தான் காரணமாகக்கூடாது. அவள் தானாக மணியிடம் முழுவதும் சொல்லியிருக்கிறாள் என்பது என்ன நிச்சயம்? சொல்லியிராவிட்டால் அசட்டுத்தனம் ஆபத்தாக அல்லவோ முடியும்?

இவ்விதம் எண்ணியவனாய், ராமு, சடக்கென்று ஒரு சந்தில் திரும்பி மணியின் கண்ணில் படாமல் தப்பினான். ஆனால் அன்று காலையில் நடந்த சம்பவத்தைத் தன் மனத்தைவிட்டு அகற்ற அவனால் முடியவில்லை. அந்தப் பால்வடியும் புதுமுகத்தின் களங்கமற்ற பார்வை; தடங்கல், திகைப்பு, பயம் இவையற்ற அந்தத் தெளிவான சொற்கள்! ‘இதோ வந்துடுவா!’ என்றாள் அவள். அதில் என்ன நேர்மை! என்ன மரியாதை! இன்னும், தன்னை உள்ளே வரும்படி அழைத்ததில் என்ன நம்பிக்கை! – தன் புருஷனின் நண்பன் என்றதால் ஏற்பட்டது! ‘சே, சே, அந்த நாலு வார்த்தைகளில் அவள் எவ்வளவு அர்த்தத்தை வைத்து விட்டாள்! நமையும் நம்பினாள்… அவளா அசடு? அதனால்தான் எனக்கு அந்தக் கலவரம் ஏற்பட்டது.  மணியை மாலையில் கண்டு அவனிடம் சொல்ல வேண்டும்’. இந்த மாதிரி எண்ணிக்கொண்டு ராமு நடந்தான். ஆனால் தான் முதலில் அந்தப் பேச்சை எடுப்பதற்கு முன்பு, நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். மாலை ஏழு மணிக்குச் சென்றால் அவன் நிச்சயம் வீட்டிலிருப்பான் என்று எண்ணினான்.
('கனகாம்பரம்' கதையில் கு.ப.ராஜகோபாலன்) 














வீட்டிலிருப்பான் என்று எண்ணினான்.

மனித யந்திரம் சிறுகதையில்

மனித யந்திரம் சிறுகதையில்
.....இந்த மனம் இருக்கிறதே, அப்பா! ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கும் அது உண்டு. நீறு பூத்த நெருப்பை வேதாந்திகள் பெரிய விஷயங்களுக்கு உபமானம் சொல்லுவார்கள். ஆசையைப் பொறுத்தவரை அந்த உபமானத்தால் பிள்ளை பெரிய மனுஷர்தான். 'மீனாச்சியா! அந்த அப்பாவிப் பயல்!' என்று பலர் துச்சமாகக் கருதுவார்கள். முகத்திற்கெதிரேயும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட 'அப்பாவி'ப் பிராணியின் மனத்தில் புகைந்து கவிகிறது ஆசை. வீட்டில் குழந்தைக்குப் பால் தட்டாமலிருக்க - ஏன், பால் விற்று நாலு காசும் சம்பாதிக்க - மாடும் கன்றும் வாங்க வேண்டும்! தெற்குத் தெரு மாவன்னாவுக்கு 'மேடோ வர்' செய்த நிலத்தைத் திருப்ப வேண்டும். இது மட்டுமா? கால் மேல் கால் போட்டு, 'ஏ மீனாட்சி!' என்று தாம் அழைக்கப்படுவது போல், தம் இஷ்டப்படி ஆட ஒரு மீனாட்சியும் ஸ்டோர் கடையும் கைக்குள் வரவேண்டும். ஒரு முறை கொழும்புக்குப் போய்விட்டுத் தங்க அரைஞாண், கடிகாரச் சங்கிலி, வாட்ட சாட்டமான உடம்பு, கையில் நல்ல ரொக்கம், கொழும்புப் பிள்ளை என்ற பட்டம் முதலிய சகல வைபவங்களுடனும் திரும்ப வேண்டும். தெருவில் எதிரே வருகிறவர் எல்லாரும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, பல்லை இளித்த வண்ணம் 'அண்ணாச்சி சௌக்கியமா?' என்று கேட்க வேண்டும்! ஊரில் நடைபெறும் கலியாணமும் சம்பவிக்கும் இழவும் இவர் வருகையை எதிர்பார்த்துத்தான் தம் பாதையில் செல்லவேண்டும்...!
இன்னும் எத்தனையோ எண்ணங்கள்! தினசரி பணப்புழக்கம் எல்லாம் அவர் கையில் தான். கடைசியாய், தனியாகக் கடையைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போகிறவரும் அவர்தான். அதே சமயத்தில்தான் கடைக்குக் கூப்பிடுகிற தூரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஐந்து நிமிஷம் நின்றுவிட்டுத் தூத்துக்குடி ஷட்டில் வண்டி புறப்படுகிறது. டிக்கட் வாங்கிக் கொண்டு ராத்திரியோடு ராத்திரியாகக் கம்பி நீட்டிவிடலாம். டிக்கட்டுக்கு மட்டிலும் பணம் எடுக்கத் தினசரி கடையில் பணம் புரளும். ஆனால், அந்தப் போலீஸ்காரப் பயல் இருக்கிறானே! நினைக்கும்பொழுதே பிள்ளையவர் களுக்கு அவன் கை தோளில் விழுவது போலப் பயம் தட்டிவிடும். திடுக்கிட்டுத் திரும்பிக் கூடப் பார்த்துவிடுவார்.
 (மனித யந்திரம் சிறுகதையில் புதுமைப்பித்தன்)


திரும்பிக் கூடப் பார்த்துவிடுவார்

Tuesday, 8 January 2013

வார்த்தைகளைப் பற்றிய கவனம்

ஆர்.வெங்கடேஷ் 

.....வார்த்தைகளைப் பற்றிய கவனம் கூர்மையடைந்தது அதற்குப் பின்னால்தான். அதேசமயத்தில்தான் ம.வே.சிவகுமாரின் கதைகளை எல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய மொழியில் அப்படி ஒரு சொற்செட்டு இருக்கும். இப்போதும் விமலாதித்த மாமல்லன், தமது டிவீட்டுகளிலும் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களிலும் இப்படிப்பட்ட சொற்செட்டைக் கையாள்வது தெரியும். மாமல்லன் ஒருபடி மேலே போய், ஒருசில வாக்கியங்களில் ஐ, ஆல், கு, இன், அது, கண் எல்லாவற்றையும் கூட நீக்கிவிட்டு எழுத முயற்சிக்கிறாரோ என்று சந்தேகம் எழுவதுண்டு.

மொழிவளம் அதிகமாக சொற்சிக்கனம் கைகூடும். “என்றார்கள்”, ”சொன்னார்கள்”, ”கிறு”, “கின்று” விகுதிகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம். வழக்கமான ஆரம்பம், வழக்கமான முடிவு போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று முனைந்தாலே புது வாக்கியம் கிடைக்கும். ஒரு கட்டத்தில், ஒரு கதைக்குள் ஒரு சொல் மறுமுறை இடம்பெறக்கூடாது என்ற கட்டுப்பாட்டைக்கூட வகுத்துக்கொண்டு எழுதியிருக்கிறேன். மேலும், தவிர, அதே போல், இந்நிலையில் போன்ற இணைப்புச் சொற்களை மிகவும் பொருள்பொதிந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்துவது என்ற பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டேன். இவை இல்லாமலும் வாக்கியம், முழுமை பெறும். பொருள் புரியும்.

Saturday, 5 January 2013

வாழ்கிற காலத்தின் ஜீவரசம்

 சுந்தர ராமசாமியின்  ஒரு புளிய மரத்தின் கதை முன்னுரையிலிருந்து 
இது என்னுடைய முதல் நாவல்.

தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசை திருப்பிவிட வேண்டுமென்றோ, உத்தி இத்யாதிகளில் மேல் நாட்டுக் களஞ்சியத் திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை.  எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமையூட்டவோ எழுதுவதில்லை. நவநவமாய் ஆபரணங்களைச் செய்து அன்னையின் கழுத்தில் சூட்டுவது அல்ல, தன் கழுத்திலேயே மாட்டிக்கொண்டு அழகு பார்க்கவே அவனுக்கு ஆசை.. கலைஞனின் சமூகப் பொறுப்புகளும் பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டுவிட்ட காலம் இது. அவன் எந்த அளவுக்கு சுயநலக்காரன், திமிர் பிடித்தவன், அரசாங்க அமைப்பின் எதிரி, அனைவரையும் திரணமென மதிக்கும் அகங்காரி, சகோதரத் தொழிலாளிகள் மீது தீராத பொறாமை உணர்ச்சியை அடைகாத்து வருபவன், சில வேளைகளில் எப்படி மனிதனிலும் கடைமனிதன் அவன் – இவை எல்லாம் மறந்து போய்விட்ட பாவனை காட்டும் காலம் இது. வெகுளிகளில் அவன் அக்கிர கண்ணியன். அவனால் சொந்தம் பாராட்ட முடியாத அர்ச்சனைகள் சொரியப்படுகிற போது அதையும் அவன் கேட்டுக்கொண்டுதான் இருப்பான். ஆமோதிக்க, உணமை உணர்ச்சி  அவனை உறுத்தும். மறுக்க அவனுடைய புகழாசை விடாது. விமர்சகர்களுக்கு வேட்டைதான். காண ஆசைப்படுவதையெல்லாம் கண்டுவிட்டதாகவே சொல்லிவிடலாம். ஆட்சேபணை இல்லை.

எழுத்தாளனும் ஒரு கலைஞன். தன் எழுத்து எவ்வாறு பிறர் படித்து ரசிக்கும்படியாக அமைந்து விடுகிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தத்தளிக்கும் அப்பாவி அவன். அவன் வாழ்கிற காலத்தின் ஜீவரசம் அவனுள் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய பொறிகளுக்கு வசப்பட்ட வாழ்க்கையின் கோலத்தை எழுதுவதிலும், எழுதாமல் விடுவதிலும், அதன் அடுக்கிலும், தேர்விலும், அழுத்தத்திலும், முடிப்பிலும் அவனுடைய ரத்த நம்பிக்கைகள் துளிர்க்கின்றன. வைஷ்ணவ நெற்றியில் நாமம் போல்  டைட்டில் பக்கத்தில் அவை பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது இல்லை. பிரமாணமாக உருவாகாத சிந்தனைகளும், தீர்ப்புகளுமே படைப்பில் கசிகின்றன. விஞ்ஞான பத்ததிக்கும், தருக்க சாஸ்திர முறைக்கும் இலக்காகாத அவ்வுணர்வுகளின் தீர்ப்புகளில் முரண்பாடுகள் சகஜம்; தவிர்க முடியாதவை. இதற்கு நேர்மாறாக, கலையுலகில் அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களுக்குத் தலையணை உறை தைப்பவன் கலைஞனே அல்ல. தெருக்கோடி கிறிஸ்துவ பஜனையில் தொண்டையைக் கிழித்துக் கொள்பவனுக்கும் அவனுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. கலைஞனின் படைப்பின் விளைவால் புதிய மாற்றங்கள் நிகழலாம்: மொழி செழுமை அடையலாம்; இடைவெளிகள் அடைக்கப்படலாம். இவை விளைவுகள். தலைகீழாகச் சொல்லிப் பழகி விட்டார்கள். சமூக சாஸ்திரிகளான விமர்சகர்கள். கலைஞனின் வெகுளித்தனம் மறுக்காமல் பழகிவிட்டது.

நாவல் துறைக்கு இந்நாவல்வழி நான் அறிமுகமாக நேர்ந்தது எனக்கு ஏதேதோ வகைகளில் திருப்தி தருகிறது..

படித்துப் பாருங்கள். இந்நாவல் உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் இருக்கலாம். சில நாவல்கள் நன்றாக இருக்கும். சில நாவல்கள் நன்றாய் இராது.

நான் இதைவிடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக்கூடுமென்று தோன்றுகிறது.